search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கொம்பு அணை உடைப்பு"

    முக்கொம்பு அணை உடைப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #MukkombuDam
    நெல்லை:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டப் படிப்பில் பகுதி நேர ஆய்வாளராக சேர்ந்து ஆய்வுகளை செய்து வந்தார். நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு 180 குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக இஸ்லாம் மதத்தை தழுவினர். அது தொடர்பாக ஆய்வு நடத்தி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்தார். அதற்கான வாய்மொழித் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த வாய்மொழித் தேர்வை திருமாவளன் நிறைவு செய்ததையடுத்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

    முன்னதாக திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. முக்கொம்பு அணை உடைபட்டது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக அளவில் விடுதலை சிறுத்தை கட்சி வருகிற ஆகஸ்ட் 31‍-ந் தேதிவரை பனை விதைகள் விதைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் எங்கள் கட்சி சார்பில் கேரள மக்களுக்கு 10 லட்சம் நிதி, 15 லட்சத்தில் நிவாரண பொருட்களும் 2 நாட்களில் வழங்க இருக்கிறோம். கேரளாவிற்கு மத்திய அரசு வழங்கி உள்ள நிதி போதாது.

    கேரள முதல்வர் கேட்டுக் கொண்டபடி ரூ.3 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அரபு நாடு தொகையை வாங்க கூடாது என்பது தவறானது. மதவாத அடிப்படையில் அணுகாமல் மனிதநேய அடிப்படையில் மத்திய அரசு அணுக வேண்டும். அனைத்து கட்சி தலைவராலும் மதிக்க கூடிய முதுபெரும் தலைவர் கலைஞர். அவரது இறப்புக்கு பா.ஜ.க. தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த அடிப்படையில் இரங்கல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். தி.மு.க. தரப்பில் அ.தி.மு.க.வை அழைக்கவில்லை. அழைத்திருந்தாலும் தவறில்லை.



    தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவ‌து வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது. தேர்தல் நெருங்குவதால் அரசியல் களம் சூடுபிடிக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MukkombuDam

    ×